பிரித்தானியாவில் அதிரடி வேட்டை ; இலங்கையர் உட்பட 7 பேர் கைது
பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட பாரிய அதிரடி சோதனை நடவடிக்கையில், இலங்கையர் ஒருவரை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆட்கடத்தல் மற்றும் மனித கடத்தலுக்கு எதிரான ‘ஒப்ரேஷன் லிபர்டேரா III’ (Operation Liberterra III) எனப்படும் சர்வதேச நடவடிக்கையின் கீழ், தேசிய குற்றவியல் முகவரகம் (NCA) இந்த கைது நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து, பல்வேறு பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், இன்டர்போல் (Interpol) அமைப்பின் வரலாற்றிலேயே மிகப்பெரிய சர்வதேச தேடுதல் வேட்டை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் கீழ், பிரித்தானியாவின் பல பகுதிகளில் முக்கிய கைதுகள் பதிவாகியுள்ளன. லிவர்பூல் பகுதியில், பிரான்சில் சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வந்த 30 வயதுடைய இலங்கைத் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரேட் மான்செஸ்டர் பகுதியில், ஜெர்மனியில் பாலியல் வன்புணர்வு குற்றத்திற்காகத் தேடப்பட்ட 38 வயதுடைய ஈராக் நபர் ஒருவரும், சட்ட விரோத படகு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 41 வயதுடைய சிரிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெட்ஃபோர்ட்ஷயர் பகுதியில், பிரான்சில் கொலைக் குற்றத்திற்காகத் தேடப்பட்ட 29 வயதுடைய எகிப்து நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் பகுதியில், மனித கடத்தல் குற்றச்சாட்டில் பிரான்சால் தேடப்பட்டு வந்த 30 வயதுடைய பல்கேரிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெர்மனியால் தேடப்பட்ட உக்ரைன் நபர் ஒருவரும், ருமேனியாவால் தேடப்பட்ட நபர் ஒருவரும் மான்செஸ்டர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஏழு பேரையும் அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த தேசிய குற்றவியல் முகவரகத்தின் துணைப் பணிப்பாளர் ரிக் ஜோன்ஸ் (Rick Jones), “பிரித்தானியாவில் பதுங்கியிருக்கும் சர்வதேச குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த, உலக நாடுகளுடன் இணைந்து தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.