கைதாகும் அச்சத்தில் உதய கம்மன்பில; அனுர அரசாங்கத்தின் மீது சீற்றம்
நவம்பர் 21 ஆம் திகதி கூட்டு எதிரணியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள "நுகேகொட பேரணிக்கு" முன்னதாக தம்மைச் சிறையில் அடைக்க அரசாங்கம் சதி செய்வதாக, முன்னாள் அமைச்சரும், பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில கூறியுள்ளார்.
கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். இதன்போது அவ்ர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் மீது சீற்றம்
அண்மையில் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நபர் ஒருவர், கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் தனக்கு எதிராக ஒரு முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
கையூட்டல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 125 இன் கீழ், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை தமது ஊடக அறிக்கைகள் மூலம் அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டி, இந்த முறைப்பாட்டை ஆணைக்குழு அதிகாரிகளே தயாரித்துப் பதிவு செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இந்த முறைப்பாடு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், முறைப்பாடு செய்ததாகக் கூறப்படும் அரச சார்பற்ற நிறுவனத்தின் செல்லுபடியான பதிவு இலக்கம் கூட அதில் இல்லை என்றும் கம்மன்பில தெரிவித்தார்.
தற்போதைய பணிப்பாளர் நாயகத்தின் நியமனம் குறித்து தாம் முன்பு வெளியிட்ட கருத்துகள், உயர் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசிகளின் அடிப்படையில் அமைந்தவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நேர்காணலில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாதவ தென்னக்கோன் புறக்கணிக்கப்பட்டு, ரங்க திசநாயக்க நியமிக்கப்பட்டதற்கு சிரேஷ்ட அரசாங்கத் தலைவர்களின் செல்வாக்கே காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊழல் நிறைந்த ஒரு செயல்முறையின் விளைவாகவே கையூட்டல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். நாம் அதை அம்பலப்படுத்தும்போது, தவறைத் திருத்துவதற்குப் பதிலாக, உண்மையைத் தெரியப்படுத்துபவர்களை சிறையில் அடைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
அதேவேளை தம்மைக் கைது செய்ய ஆளும் நிர்வாகம் மேற்கொள்ளும் ஏழாவது முயற்சி இது என்றும், சில அமைச்சர்கள் தனிப்பட்ட முறையில் தமது தடுப்புக்காவலுக்கு அழுத்தம் கொடுப்பதாகவும் உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளார்.