யாழில் இரண்டு இளைஞர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்!
யாழ்.பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பகுதியில், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (19-06-2022) வல்லை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புத்தூர் பகுதியில் இறைச்சி வியாபாரம் செய்யும் வியாபாரி, வல்லை பகுதியூடாக வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற 2 இளைஞர்கள் கத்தி முனையில் வியாபாரியை அச்சுறுத்தி அவரிடமிருந்த 3 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளை அடித்துள்ளனர்.
இதன்போது சாமர்த்தியமாக செயல்பட்ட இறைச்சி வியாபாரி ஒரு இளைஞனை துரத்திப் பிடித்தார். மற்றயவர் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்று இருந்தார்.
அதேவேளை அப்பகுதியில் கூடிய இளைஞர்களால், தப்பி சென்ற இளைஞன் நாவல் காட்டு பகுதியில் உள்ள கோயில் கேணியில் கால் கழுவிக் கொண்டிருந்த போது கையும் மெய்யுமாக பிடிபட்டார்.
வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவரும் யாழ்ப்பாணம் புறநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
இளைஞர்களின் உடைமையில் இருந்து, கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீட்கப்பட்டதுடன், இருவரையும் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.