மெகசின் சிறைக் கைதிகளுக்கு போதைப்பொருள் வீச முயன்ற இருவர் கைது
மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இன்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியிலுள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவ்விடத்திலிருந்து சிறைச்சாலையினுள் 02 பொதிகளை வீசுவதற்கு இவர்கள் முயற்சித்த வேளையில், பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்களிடமிருந்த 02 பொதிகளைச் சோதனையிட்ட போது, 22 கிராம் 250 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 02 மில்லிகிராம் 'ஏஷ்' போதைப்பொருள், 02 தொலைபேசி சார்ஜர்கள், 02 ஜோடி தோடுகள், 10 லைட்டர்கள் மற்றும் 02 சிறிய ரக கைப்பேசிகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 29 வயதுடைய கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் நாளை (09) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.