மினுவாங்கொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது
மினுவாங்கொடையில் ஒருவர் சுட்டு சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (14) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 7 ஆம் திகதி, மினுவங்கொடை பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால், கல்லொலுவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விசாரணை நடவடிக்கை
இந்தக் சம்பவம் தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, அத்தனகல்ல பொலிஸ் பிரிவின் உராபொல பகுதியில் நேற்று சந்தேக நபர் ஒருவரும் மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவில் ஆஜரான பின்னர் மற்றுமொரு சந்தேகநபரும் இந்தக் குற்றத்திற்கு உதவியாக இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 27 மற்றும் 33 வயதுடைய யாகொடமுல்ல மற்றும் கலபிடமட பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
துப்பாக்கிச் சூடு நடத்த வந்த சந்தேக நபர்களுக்கு தங்குமிடம் அளித்தல் மற்றும் சதித்திட்டம் தீட்டுதல், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் போலியான எண் தகடுகளைப் பயன்படுத்தி தகவல்களை மறைத்து உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.