இலங்கையில் மோசமடையும் நிலைமை ; அச்சத்தை ஏற்படுத்தும் நோயாளர் எண்ணிக்கை
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 73,455 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (16) வியாழக்கிழமை வரையான தரவுகளின்படி, டெங்கு நோயினால் 50 பேர் உயிரிழந்துள்ளதுடன், நேற்றைய தினம் மாத்திரம் 1,025 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோயாளர்கள்
அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேற்கு மாகாணத்திலேயே பதிவாகியுள்ள நிலையில், அங்கு 38,700 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாணத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,341 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 14,625 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஜூலை மாதத்தின் முதல் 16 நாட்களில் மட்டும் 18,076 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், இந்த ஆண்டில் அதிகளவான மாதாந்த டெங்கு நோயாளர்கள் ஜூன் மாதத்தில் 21,538 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.