தென்னிலங்கையில் சுற்றுலா பயணிகளை தாக்கிய இருவர் கைது
காலி உனவட்டுனவில் வெளிநாட்டு பயணிகளை தாக்கிய இரு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
உனவட்டுனவில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் விருந்தில் இருந்த மூன்று மூன்று ஜேர்மனி ஜோடிகளைக் கொண்ட ஆறு பேருக்கும், இரு இலங்கையர்களுக்கும் இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ஜேர்மனி சுற்றுலாப் பயணிகள் குழு இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு முச்சக்கர வண்டியில் ஹோட்டலை விட்டு வெளியேறியது.
இதற்கிடையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரண்டு இலங்கையர்களும் கார் ஒன்றில் சுற்றுலாப் பயணிகளைத் துரத்திச் சென்று, அவர்களை வழிமறித்து தாக்கினர்.
தாக்கப்பட்ட ஜேர்மனியர்கள் இந்த சம்பவம் குறித்து உனவட்டுன சுற்றுலாப் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.
அதன்படி செயல்பட்ட பொலிஸார், சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்களையும் ஒரு மணி நேரத்திற்குள் கைது செய்து, மேலதிக விசாரணைக்காக ஹபராதுவ பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சந்தேக நபர்கள் தாக்க வந்த காரும் பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.
ருமஸ்ஸல பகுதியைச் சேர்ந்த 25 மற்றும் 26 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் சுற்றுலாத் தொழிலிலும் ஈடுபட்டவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.