ஒரே நேரத்தில் பலியான இரட்டை பெண் குழந்தைகள் ; நாட்டு மருந்து கொடுத்த பின் நடந்தேறிய சம்பவம்
தமிழகம் - பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரத்தை சேர்ந்த கந்தசாமி – தனலட்சுமி தம்பதிகளுக்கு 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருந்தனர்.
கந்தசாமி துபாயில் வேலை பார்த்து வர, தனலட்சுமி தனது தாய் சாந்தியுடன் வாலிகண்டபுரத்தில் வசித்து வந்தார். ரேஷ்மா மற்றும் தனுஷ்டி என பெயரிடப்பட்ட அந்த இரட்டை குழந்தைகளுக்கும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டது.
நாட்டு மருந்து
உடல்நிலை சீராக இல்லாத நிலையில், பாட்டி சாந்தியுடன் இணைந்து குழந்தைகளை சிகிச்சைக்காக அருகிலுள்ள நாட்டு வைத்தியரை என்பவரை அணுகியுள்ளனர்.
அப்போது அந்த நாட்டு வைத்தியர், இரட்டைக் குழந்தைகளுக்கும் மருந்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து குழந்தைகள் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அதே நாளின் பிற்பகல் 1.30 மணியளவில் ரேஷ்மா என்ற ஒரு பெண் குழந்தை திடீரென உடல்நலம் பாதித்து உயிரிழந்தது.
அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மற்றொரு குழந்தையான தனுஷ்டியை உடனே பெரம்பலூர் அரச வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அழைத்து செல்லும் வழியிலேயே அந்த குழந்தையும் உயிரிழந்தது.
தற்போது, இரு குழந்தைகளின் உடல்களும் உடற்கூறு பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. மங்களமேடு பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு மருந்து கொடுக்கப்பட்ட பின் இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.