யாழில் இரட்டை குழந்தைகளை தொடர்ந்து தாயும் உயிரிழப்பு; துயரத்தில் உறவுகள்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த நிமலராஜு சாருமதி (வயது 28) என்ற இளம் தாயே உயிரிழந்தார்.
உடற்கூறு மாதிரிகள் கொழும்பிற்கு
குறித்த தாய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவைசிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும் ஒரு பெண் குழந்தையையும் பிரசவித்தார்.
இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்தது, மற்றொரு குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில், தாய் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் உறுதியாகாத நிலையில், உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பப்படவுள்ளன.