துஷார உபுல்தெனியவின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிப்பு
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கைது செய்யப்பட்டமையும், அவரது பணி இடைநீக்கமும் முறையான சட்ட நடைமுறைகளின்படி இடம்பெறவில்லை எனவும், அதன் காரணமாக அவரது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
துஷார உபுல்தெனிய சார்பில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முடிவிலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டு
இதன்படி, இந்த கைது மற்றும் பணி இடைநீக்கத்தின் ஊடாக குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) நீதி அமைச்சின் செயலாளரும் அரசியலமைப்பை மீறியுள்ளதாக ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி கைதி ஒருவரை விடுவித்ததாக துஷார உபுல்தெனிய மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.
விசாரணைகள் பக்கச்சார்பின்றி நடைபெற வேண்டும் எனக் கூறி, 2025 ஜூன் 09 அன்று கூடிய அமைச்சரவை அவரை பணி இடைநீக்கம் செய்யத் தீர்மானித்தது.
ஜூன் 10, 2025 அன்று அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் உபுல்தெனியவின் மனைவி தாக்கல் செய்த முறைப்பாட்டை விசாரித்த ஆணைக்குழு பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது, பாதிக்கப்பட்டவரை கைது செய்யும் போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. அத்துடன் நீதவான் நீதிமன்றில் உண்மைகளைச் சரியாகவோ அல்லது போதுமான அளவிலோ CID சமர்ப்பிக்கவில்லை.
நீதி அமைச்சின் செயலாளர் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில், சம்பவம் தொடர்பான உண்மைகள் முழுமையாக உள்ளடக்கப்படவில்லை.
அவர் திணைக்களத் தலைவராக இருந்தபோதும், அவரது அதிகாரங்கள் ஏனைய அதிகாரிகளுக்குப் பகிரப்பட்டிருந்த நிலையில், அவரைப் பணி இடைநீக்கம் செய்தது கேள்விக்குரியது என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தெரிவித்துள்ளது.
அத்துடன் சட்ட ரீதியான நடைமுறைகளைப் பின்பற்றாமல் கைது செய்தமை மற்றும் பணி இடைநீக்கம் செய்தமை ஊடாக, அரசியலமைப்பின் 12-வது உறுப்புரை (சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு) மற்றும் 13(1) உறுப்புரை (தன்னிச்சையாகக் கைது செய்தல் மற்றும் தண்டித்தல் தடை) ஆகியவற்றை பிரதிவாதிகள் மீறியுள்ளதாக ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து பொலிஸ் மா அதிபரும், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஆராய்ந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.
பணி இடைநீக்கத்தினால் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதால், அது குறித்து நீதி அமைச்சின் செயலாளர் உரிய நடவடிக்கை எடுத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும். இந்த பரிந்துரைகளை 2026 ஏப்ரல் 30-ஆம் திகதிக்கு முன்னர் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.