மட்டக்களப்பில் பரபரப்பு; பெண் ஒருவர் கொடூரமாக கொலை
மட்டக்களப்பு அரசடி பகுதியில் பெண் ஒருவரை வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மட்டக்களப்பு வர்த்தகர் ஒருவரின் மனைவியைக் கொலைசெய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப் பிடிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் மட்டக்களப்பு அரசடி, பார் வீதியிலுள்ள வீட்டிலேயே இந்த துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த வீட்டுக்கு வழமையாக வருகைதந்து வேலைகள் செய்துவிட்டுச் செல்லும் தகப்பனும் மகளுமே இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தகப்பனும் மகளும் பசிக்கிறது சாப்பாடு தாருங்கள் என்று கூறி குறித்த பெண்ணிடம் சாப்பாடு வாங்கி உண்ட பின்னரே அவர்கள் இந்தக் கொலையைச் செய்துள்ளனர். இன்று வீட்டுக்கு வந்தவர்கள் குறித்த வீட்டில் வேலைகளைச் செய்துவிட்டு உணவு உண்டுகொண்டிருக்கும்போது திடீரென குறித்த வீட்டின் உரிமையாளர் பெண் மீது கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளதுடன் கழுத்தை வெட்டிய பின் தாலிக்கொடியை பறித்துள்ளனர்.
அத்துடன் காதணிகளைக் கழற்ற முடியாத நிலையில் அதனை வெட்டி எடுத்துச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் அங்கிருந்த தங்க நகைகளை களவாடிச்சென்றபோது வீதியில் நின்றவர்கள் அவர்களின் உடைகளில் இரத்தக்கறை உள்ளதை கண்டு சந்தேகம்கொண்டு துரத்திச்சென்று இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின்போது 50 வயதுடைய தயாவதி செல்வராஜா என்னும் பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதிக்கு வந்த மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் புலனாய்வுத்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பிரிவு பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் இந்தச் சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பெருமளவு மக்கள் ஒன்றுகூடியதன் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளதை காண முடிந்தது.




