மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 10 பேருக்கு பல இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசான் சந்ரஜித் உள்ளிட்ட 10 பேருக்கு கொழும்பு கோட்டை பகுதியின் பல இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, காலிமுகத்திடல், மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த முடியும் என கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவை மீறும் போராட்டக்காரர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.