ஈரானின் மிரளவிட்ட சம்பவத்தால் கடும் கோபத்தில் ட்ரம்ப் ; நேரடியாக களத்தில் இறங்கும் அமெரிக்கா
“இஸ்ரேல் இனி ஈரானை தாக்காது; ஆனால், கத்தார் மீது மீண்டும் ஈரான் கை வைத்தால், ஈரானின் ஒட்டுமொத்த எரிவாயு தளங்களையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும்,” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து போர் தொடுத்துள்ளன. இப்போர் மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் முக்கிய எரிவாயு தளமான, 'சவுத் பார்ஸ்' இயற்கை எரிவாயு தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஏவுகணை தாக்குதல்
இதற்கு பழி வாங்கும் விதமாக ஈரான், அதன் அண்டை நாடான கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு ஆலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் கத்தார் நேரடியாக ஈடுபடவில்லை.
இந்த தாக்குதலை தொடர்ந்து, கத்தாரில் உள்ள ஈரானிய துாதரக அதிகாரிகளை 24 மணி நேரத்துக்குள் வெளியேறும்படி அந்நாடு உத்தரவிட்டுள்ளது. கத்தார் மீது மட்டுமின்றி, ஐக்கிய அரபு எமிரேட்சின் எரிசக்தி நிலையங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது.
இத்தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தன் சமூக வலைதள பக்கத்தின் வாயிலாக ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: மேற்காசியாவில் நடந்து வரும் போர் காரணமாக ஈரானின், 'சவுத் பார்ஸ்' இயற்கை எரிவாயு தளம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்பே தெரியாது.
கத்தார் ஒரு அப்பாவி நாடு. அதன் மீது ஈரான் தேவையற்ற முறையில் தாக்குதல் நடத்துவது முறையல்ல. இனி இஸ்ரேல் ஈரானை தாக்காது. ஆனால், ஈரான் மீண்டும் கத்தார் மீது கை வைத்தால், ஈரானின் ஒட்டுமொத்த எரிவாயு தளங்களையும் அமெரிக்கா தரைமட்டமாக்கும் என கூறியுள்ளார்.