கட்சி தாவும் எம்.பிக்களுக்கு சிக்கல் ; விரைவில் புதிய சட்டமூலம் ; நளிந்த ஜயதிஸ்ஸ
பொதுமக்களின் வாக்குகளினால் நாடாளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், மக்கள் ஆணைக்கு எதிராகக் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்வதற்கான புதிய சட்டமூலத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

விசேட சட்டமூலம்
தற்போது அரசியல் அரங்கில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்ற போதிலும், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு உறுப்பினரையும் ஆளுங்கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தேவையும் அல்லது ஆயத்தமும் இல்லை என அமைச்சர் இதன்போது திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் விளக்குகையில், தங்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு துரோகம் இழைத்து, கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நாடாளுமன்றப் பதவிகளை ரத்து செய்வதற்கான விசேட சட்டமூலத்தை மிக விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம் எனத் தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கத்திற்குப் பொதுமக்களால் மிகவும் தெளிவானதொரு மக்கள் ஆணை வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமையவே அரசாங்கம் தனது எதிர்கால அரசியல் மற்றும் நிர்வாக நகர்வுகளை முன்னெடுக்கும் எனவும் அமைச்சர் கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.