கனடாவில் "திருகோணமலை பூங்கா" திறந்து வைப்பு!
கனடாவில் இலங்கையின் திருகோணமலையினை மையப்படுத்தி "திருகோணமலை பூங்கா" என்ற பெயரில் பூங்கா ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்கா பிராம்டன் நகரில் நேற்றைய தினம் (12-06-2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த "திருகோணமலை பூங்கா", ட்ரிங்கோ விஷன் அனுசரணையுடனும் பிராம்டன் மாநகரின் உறுப்பினர்கள் மற்றும் மாநகர முதல்வர் பற்றிக் பிரவுன், மைக்கேல் பல்லேஷி, நவஜீத் கவுர் ஆகியோரின் அனுசரணையுடனும் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு சிறுவர்களுக்கான விளையாட்டு இடங்களும், பெரியவர்கள் இளைப்பாறும் இடங்களும் மிகவும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பூங்கா திறப்பு நிகழ்வில் பேசிய பிராண்டன் மாநகர முதல்வர்,
இலங்கையின் யாழ்ப்பாணம், திருகோணமலை பகுதியில் அதிகளவான தமிழ் மக்கள் வசிப்பது போல் எமது மாநகரத்திலும் அதிகளவான தமிழர்கள் வசிக்கின்றார்கள்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை மற்றும் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கனடாவில் முதல் முதலாக குரல் கொடுக்கின்ற மாநகர சபையாக பிராம்டன் மாநகர சபை திகழ்ந்து வருகின்றது.
திருகோணமலை பூங்காவனது ஈழத் தமிழர்களுக்கும் பிராம்டன் மாநகர மக்களுக்கும் இடையிலான நட்புக்கு அடையாளமாக அமைகின்றது.
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைத்திருந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக அமைந்திருந்த நினைவு தூபியை இலங்கை அரசாங்கம் அழித்த போது பிராம்டன் நகரத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவாக தூபியை அமைப்பதற்கான இடத்தை வழங்கியிருந்தனை நினைவு கூறுகிறேன்.
எமது மாநகரத்தில் இவ்வாறான ஓர் அழகிய பூங்காவினை அமைப்பதன் ஊடாக கனேடிய தமிழர்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நட்புக்கு அடையாளமாக திகழ்கின்றது.
இந்த பூங்கா அமைவதற்கு பல்வேறு வழிகளிலும் உதவிய கிருஷ்ணா மற்றும் ரெஜி ஆகியோருக்கு நான் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழ் மக்களுக்கும் கனடாவுக்கும் ஓர் உன்னதமான உறவு உள்ளது.
அதனை நாம் அடிக்கடி நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் கனடாவின் பல இடங்களிலும் பல விடயங்களை செய்து வருகின்றோம்.
அதேபோல் தான் இந்த திருகோணமலை பூங்காவும் நட்புறவின் சின்னமாக அமைகிறது என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஹாலிபாஸ் மற்றும் கியூபெக் மாகாணத்திலிருந்தும் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.