தமிழர் பகுதியில் காட்டுக்குச் சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
திருகோணமலையில் காட்டுப்பகுதியில் விறகு வெட்டுவதற்காக சென்ற நபரொருவர் கரடி தாக்குதலுக்குள்ளாகி பொது வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் திரியாய் காட்டுப்பகுதியில் இன்றைய தினம் (28-09-2023) மாலை இடம்பெற்றுள்ளது.
வறுமையான சூழ்நிலை காரணமாக விறகு வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற போது விழுந்து கிடந்த மரத்துக்கு கீழால் உறங்கிக் கொண்டிருந்த கரடி பாய்ந்து தாக்கியதால் தலை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இச்சம்பவத்தில் கும்புறுபிட்டி - நாவல்சோலை பகுதியைச் சேர்ந்த 41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான என். செல்வராசா என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
மேலும், இந்த பிரதேசத்தில் கரடிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதாகவும், தேன் எடுக்கும் காலத்தில் கரடிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் திரியாய் பகுதியில் உள்ள மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
படுகாயமடைந்த நபர் சுய நினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.