திருகோணமலையில் கடும் கடலரிப்புக்குளாகும் பிரதேசம்; மக்கள் கவலை
திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபிப் நகரப் பிரதேசம் தற்போது கடுமையான கடல் அரிப்புக்குள்ளாகி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, மீனவர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் முக்கிய இடமே கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளமை மீனவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கடல் அரிப்பு காரணமாக, பொதுமக்கள் அன்றாட போக்குவரத்துக்காக பயன்படுத்தி வந்த பாதை தற்போது கடலுக்குள் உள்வாங்கப்பட்டு , மக்கள் பயணிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.
இதனால் பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரிதும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாது கரையோரமாக காணப்பட்டு வந்த பல மரங்கள் கடல் அரிப்பு காரணமாக வேரோடு சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ளன.

யாழில் கனடா வாழ் புலம்பெயர் தமிழர் மீது தாக்குதல்; இலங்கை வரை தொடர்ந்த ஆலய பிரச்சனை! வெளிவந்த உண்மைகள்
கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதி, உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் இடமாகவும் காணப்படுகிறது. பாதுகாப்பு வேலிகள் நிறுவுவதன் மூலம் எதிர்காலத்தில் மேலும் கடல் அரிப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்புத் துறைகள் இந்த விடயத்தை தீவிரமாக கவனத்தில் கொண்டு, உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.