மினி சூறாவளி ....சுழறன்றடித்த காற்று; கொழும்பில் வீடுகளுக்கு பெரும் சேதம்
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (30) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு - காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலும், கிரேண்ட்பாஸ் பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் விழுந்துள்ளது.
50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று
அதேவேளை கிரேண்ட்பாஸ் புனித ஜோசப் வீதியில் பெரிய அளவிலான மரம் ஒன்று விழுந்ததால், அருகில் இருந்த 6 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. எனினும் இதன்போது உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை .
அதேவேளை சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்கள சிரேஸ்ட வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
மத்திய மலைப் பிராந்தியங்களின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 - 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 30 - 40 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் எனத் தெரிவித்தார். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.