கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவருக்கு நேர்ந்த சோகம்!
நுரைச்சோலை இளந்தையடி கடற்கரையில் குளிக்கச் சென்ற இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மதுரங்குளி ஹிதாயத் நகரைச் சேர்ந்த கச்சு முஹம்மது சஹீத் ( வயது 60) மற்றும் அஜ்வாத் சஹீர்கான் ( வயது 22) ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரும் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டனும், பேரனும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், உயிரிழந்த இளைஞர், புத்தளம் காஸிமிய்யா அரபுக் கல்லூரியில் கல்வி கற்ற மௌலவியாவார்.
இந்நிலையில் உயிரிழந்த இருவரும் இன்று மாலை குடும்பஸ்தர்கள் சகிதம் நுரைச்சோலை - இளந்தையடி சவுக்குத் தோட்டத்திற்கு சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேற்படி கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கியதை அவதானித்த அந்த இளைஞர்களின் பாட்டன், அவ்விரு இளைஞர்களையும் காப்பாற்றுவதற்காக கடலுக்குள் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, நீரில் மூழ்கிய இரண்டு இளைஞர்களில் ஒருவரை பாதுகாப்பான முறையில் வெளியே அழைத்துவந்த பாட்டன், மற்றைய இளைஞரையும் மீட்பதற்காக மீண்டும் கடலுக்குள் செல்ல தயாரான போதே அவர் திடீரென கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது.
மேலும், நீரில் மூழ்கி காணாமல் போன மற்றைய இளைஞரை அங்கிருந்தவர்கள் நுரைச்சோலை பொலிஸார் மற்றும் மீனவர்கள் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
எனினும், நீரில் மூழ்கி காணாமல் போன குறித்த இளைஞனின் சடலம் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர், ஆலங்குடா பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சம்பவம் நுரைச்சோலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.