முன்னாள் அமைச்சர் அலி சப்ரிக்கு போக்குவரத்து விதிமீறல் தண்டம்; பாராட்டி பதிவு
முன்னாள் நீதித்துறை அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரனியுமான அலி சப்ரி, நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விளக்கு விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.
இந் நிலையில் தனக்கு அபராதம் விதித்த காவல்துறை உத்தியோகத்தரின் முன்மாதிரியான தொழில்முறையைப் பாராட்டி தனது அதிகாரப்பூர்வ முகநூல் கணக்கில் ஒரு சிறப்புப் பதிவை வெளியிட்டுள்ளார்.

விதிமீறலுக்காக அபராதம்
முடி திருத்திக்கொண்டு திரும்பும்போது, தனக்குத் தெரியாமல் இந்த போக்குவரத்து விதியை மீறியதாகவும், அப்போது அங்கு வந்த காவல்துறை உத்தியோகத்தர் அந்த விதிமீறலுக்காக அபராதம் விதித்ததாகவும் அலி சப்ரி கூறினார்.
அந்த உத்தியோகத்தர் மிகவும் பணிவுடன் நடந்துகொண்டு, ‘GovPay’ மின்னணு அமைப்பு மூலம் அந்த இடத்திலேயே அபராதத்தைச் செலுத்த தனக்கு வழிகாட்டிய விதத்தை முன்னாள் அமைச்சர் அலி சப்ரி விவரித்தார்.
இந்தச் சம்பவத்தில் தனது சிறப்புக் கவனத்தை ஈர்த்தது அபராதம் அல்ல, மாறாக காவல்துறை உத்தியோகத்தர் இந்த முழு செயல்முறையையும் கையாண்ட தொழில்முறையே என்ரும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொழில்நுட்பத்தின் உதவியுடன், தேவையற்ற தாமதமோ அல்லது விரக்தியோ இன்றி, சில நிமிடங்களுக்குள் அபராதத்தைச் செலுத்தி தனது ஓட்டுநர் உரிமத்தைத் திரும்பப் பெற முடிந்ததாகவும், இது தொழில்முறை, கண்ணியம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் சரியான கலவையைத் தெளிவாகக் காட்டுகிறது என்றும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.
பொதுச் சேவைகளை மேம்படுத்துவதற்காகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து, நீதி அமைச்சராக இருந்த காலத்தில் காவல்துறை மற்றும் பிற பங்குதாரர்களுடன் தாம் நடத்திய ஆரம்பகட்ட கலந்துரையாடல்களையுன் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
அப்போது தொடங்கப்பட்ட சீர்திருத்தங்கள் இன்று குடிமக்களுக்கு உண்மையான பலன்களை அளிப்பதைக் காண்பதில் தமக்கு மனநிறைவு ஏற்படுவதாகவும் , எந்தவொரு பயனுள்ள சீர்திருத்தத்திற்கும் காலம் எடுக்கும் என்றாலும், பொதுச் சேவைகளை மேம்படுத்துவதற்கான நேர்மையான முயற்சிகள் ஒருபோதும் வீணாவதில்லை என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் என்றும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி பதிவிட்டுள்ளார்.