பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து விதிகள் இறுக்கம் ; காவல்துறை விடுத்துள்ள விசேட அறிவுறுத்தல்
எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் போக்குவரத்து விதிகளை மிகவும் கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) டபிள்யூ.பி.ஜே. சேனாதீர இது குறித்துத் தெரிவிக்கையில், போக்குவரத்து விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக விசேட காவல்துறை குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

பண்டிகைக் காலத்தில் வீதியோரங்களிலுள்ள ஆடை விற்பனை நிலையங்கள் மற்றும் வர்த்தக மையங்களுக்கு வருகை தரும் நுகர்வோரினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் தமது வாடிக்கையாளர்களுக்குப் போதுமான வாகன தரிப்பிட வசதிகளை வழங்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வீதியோரங்களில் முறையற்ற விதத்தில் வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்துத் தடைகளைத் தவிர்க்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வீதி ஒழுங்குமுறைகளை மீறுவோர், குறிப்பாக வாகன தரிப்பிட விதிகளைப் புறக்கணித்து வீதிகளில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு எதிராக பாரபட்சமின்றி சட்டத்தை நிலைநாட்டுமாறு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றித் தமது பயணங்களை முன்னெடுப்பதை உறுதி செய்வதே இந்த விசேட திட்டத்தின் நோக்கமெனப் பிரதி காவல்துறை மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவித்தார்.