பாலியல் மிரட்டல் ; கனடாவாழ் இலங்கை தமிழருக்கு 33 வருட கடூழிய சிறை
கனடாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கனடா வாழ் தமிழர் ஒருவருக்கு 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
145 குழந்தைகளை குறிவைத்து பாலியல் மிரட்டல் விடுத்தது தொடர்பாக, டொராண்டோவைச் (Toronto) சேர்ந்த இலங்கை தமிழர் ஒருவருக்கு அமெரிக்காவில் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இணையவழி பாலியல் சுரண்டல்
40 வயதான ரமணன் பத்மநாதனுக்கு வழங்கப்பட்ட இந்தத் தண்டனையை கொலம்பியா மாவட்டத்துக்கான அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவித்துள்ளது.
கடந்த 8 ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எதிராக இணையவழி (Online) பாலியல் சுரண்டல் குற்றங்களில் ஈடுபட்டதை இவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சிறைத்தண்டனையுடன் சேர்த்து, அவர் 10 ஆண்டுகள் கண்காணிப்பு விடுதலையில் (Supervised Release) இருக்கவும், பாலியல் குற்றவாளியாகப் பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது கனடாவில் அனுபவித்து வரும் 12 ஆண்டுகால சிறைத்தண்டனையைத் தொடர்ந்து, இந்த 33 ஆண்டுகள் அமெரிக்க சிறைத்தண்டனையும் அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
2021-ஆம் ஆண்டில் டொராண்டோ போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் மீது 93 பாலியல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணைக்குப் பின் அவர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியானமை குறிப்பிடத்தக்கது.