குறிகாட்டுவான் இறங்குதுறையின் இன்றைய அவலம்!
யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்து தருமாறு தீவக மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கான இறங்குதுறையாக குறிகாட்டுவான் இறங்கு துறையே உள்ளது.
அதுமட்டுமல்லாது தீவிகத்தில் இருந்து அன்றாடம் பெருமளவான மக்கள் குறிகட்டுவான் ஊடாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்து செல்கின்றனர்.

மிக மோசமாக பழுதடைந்த கடற்பாதை
தற்போது குறிகாட்டுவான் இறங்கு துறை சேதமடைந்துள்ளமையால், கனரக வாகனங்கள் இறங்குதுறைக்கு அண்மித்த பகுதிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதனால் கனரக வாகனங்களில் நயினாதீவு மற்றும் நெடுந்தீவுக்கு கொண்டு செல்வதற்காக கொண்டு வரப்படும் , அத்தியாவசிய பொருட்கள் உட்பட கட்டட பொருட்களான மணல் , கம்பி , சீமெந்து ஆகியவை இறங்கு துறைக்கு சற்று தொலைவில் இறங்கி அங்கிருந்து மனித வலுவை பயன்படுத்தி தூக்கி சென்று படகுகளில் ஏற்ற வேண்டிய நிலைமை காணப்படுகிறது.

அதனால் பொருட்களை கொண்டு செல்வோர் அதிக சிரமங்களை எதிர்கொள்வதுடன் அதிகளவான கூலியும் வழங்க வேண்டிய நிலையில் காணப்படுகின்றனர்.
அதேவேளை குறிகாட்டுவான் - நயினாதீவுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டு வந்த "கடற்பாதை" மிக மோசமாக பழுதடைந்துள்ளமையால் அதன் சேவையும் கடந்த சில மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளமையால் , நயினாதீவுக்கு பொருட்களை எடுத்து செல்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதுமட்டுமல்லாது நயினாதீவு நாக பூசணி அம்மன் மற்றும் நாக விகாரை ஆகியவற்றுக்கு அதிகளவான யாத்திரியர்கள் தினமும் செல்வதனால் ,பயணிகள் படகு சேவையில் பொருட்களை அதிகளவில் ஏற்ற முடியாத நிலைமை காணப்படுவதால் , நயினாதீவுக்கு பொருட்களை கொண்டு செல்வோர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே மிக விரைவில் குறிகாட்டுவான் பாலத்தையும் , கடற்பாதையை புனரமைப்பு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.