தமிழக முதலைமைச்சர் மு.க ஸ்டாலினை சந்தித்த இலங்கை முக்கியஸ்தர்!
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, (M.K Stalin) இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் (Senthil Thondaman) சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இலங்கை மக்களுக்கு கடந்த காலங்களில் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவித் திட்டங்களுக்கு செந்தில் தொண்டமான் நன்றி தெரிவித்ததுடன், அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, (Ranil Wickremesinghe) இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) மற்றும் தவிசாளர் ராமேஸ்வரன் ஆகியோர் நன்றி தெரிவித்ததாகவும் இதன்போது தெரிவித்தார்.
மேலும் இலங்கையிலுள்ள மலையக மக்களுடைய பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தியாவில் தமிழகத்திலுள்ள கூடலூரில் TENTEA நிறுவனத்தின் கீழ் வேலை செய்யும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்த மலையக தமிழர்களை அவர்களது குடியிருப்புக்களில் இருந்து வெளியேருமாறு வனத்துறையினர் சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கியுள்ள நிலையில், அங்கு நேரடி விஜயம் மேற்கொண்டு அம்மக்களுடன் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், இப்பிரச்சினை தொடர்பில் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
தற்காலிகமாக அம்மக்கள் அக்குடியிருப்புகளில் இருப்பதற்கும், தமிழக அரசு இலவசமாக 650 புதிய வீடுகளை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
இது தொர்பாக தமிழக அரசால் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, TENTEA தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டில் 650 வீடுகள் இலவசமாக அமைத்துக் கொடுப்பதற்கான அறிவித்தலை தமிழக அரசு விரைவில் வெளியிடும் என அறிவித்தார்.
மேலும் கடந்த காலங்களில் இந்தியாவில் PETA அமைப்பினால் ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை தமிழக அரசுடன் இணைந்து ஜல்லிகட்டு பாதுகாப்பு நலசங்கம் சட்ட ரீதியாக இவ்வழக்கை சந்தித்து உரிய அனுமதியை பெற்றுக் கொடுத்தது.
மீண்டும் PETA அமைப்பினால் தற்போது ஜல்லிக்கட்டு தடைசெய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு இவ்விடயத்தில் தலையிட்டு நிரந்தர தீர்வு பெற்றுத்தர வேண்டும் என செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர் இந்த வருடம் போன்றே எதிர்காலத்திலும் எந்தவித பிரச்சினைகளும் இன்றி ஜல்லிக்கட்டு நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் இச்சந்திப்பில் பாரதியார் கவிதைகள் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.