யாழ் தையிட்டி விஹாரை தொடர்பில் புதிய தீர்மானம்
யாழ்ப்பாணம் தையிட்டி விஹாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது.

கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பெறப்படவில்லை
இதன்போது, தையிட்டி தெற்கில் பொதுமக்களின் காணியில் சட்டவிரோதமாக அமைந்துள்ள “திஸ்ஸ விஹாரை" எனக் கூறப்படும் கட்டடத்திற்கு எந்த அனுமதியும் பிரதேச சபையில் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பிரதேச சபையின் சட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த கட்டடம், சட்ட விரோதம் என்பதை அறியப்படுத்த மும்மொழிகளிலும் சபையினால் அறிவித்தல் பலகை ஒன்று நாட்டப்பட வேண்டும் என்ற பிரேரணை சபையில் கொண்டுவரப்பட்டது.
குறித்த பிரேரணைக்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சட்டவிரோத தையிட்டி விஹாரையின் விஹாராதிபதியின் பதவி உயர்வுக்காக எதிர்ப்பை தெரிவித்தும், தீர்மான பிரேரணை ஒன்று சபையில் முன்மொழியப்பட்டது.
குறித்த பிரேரணையையும் சபை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதேவேளை, பிரதேச சபையின் உறுப்பினர்களால் தையிட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.