100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி ; ஒருவர் காயம்
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கெரொலினா தோட்டம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி, சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.
கட்டுநாயக்கவிலிருந்து தலவாக்கலை - லிந்துலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே, நேற்று (15) மாலை 4:00 மணியளவில் இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணை
விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓட்டுனருக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கம் காரணமாகவே முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தினால் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.