வவுனியாவில் கோர விபத்து; தூக்கி வீசப்பட்ட முச்சக்கர வண்டி; ஸ்தலத்தில் பறிபோன உயிர்
வவுனியா, திருநாவல்குளம் பகுதியில் இன்று (23) காலை இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 10.45 மணியளவில் திருநாவல்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை முச்சக்கரவண்டி ஒன்று கடக்க முயன்ற போதே ரயிலுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சாரதி
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த கடுகதிப் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி தூக்கி வீசப்பட்டுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த புகையிரத கடவை நீண்டகாலமாகப் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும், அங்கு சமிக்ஞை விளக்குகளோ அல்லது பாதுகாப்பு கேற்றுகளோ (Gate) இல்லாததே இவ்வாறான தொடர்ச்சியான விபத்துக்களுக்குக் காரணம் என அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.