மோசடிகளில் மூன்று முன்னாள் அதிகாரிகள் கைது!
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில்இடம்பெற்ற பாரிய வாகனப் பதிவு மோசடிகள் தொடர்பாக, அந்தத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரிகள் மூவர் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய சாற்றுதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் பதிவு
முன்னாள் அபிவிருத்தி உதவியாளர் (வீதிப் பாதுகாப்பு), முன்னாள் விசாரணை உதவியாளர், முன்னாள் உதவி ஆணையாளர் என்போரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டப்பூர்வமான ஆரம்பப் பதிவுகள் இல்லாத மூன்று மோட்டார் வாகனங்களை, தரவுத் தொகுப்பில் உள்நுழைத்து சட்டவிரோதமான முறையில் பதிவு செய்தமை மற்றும் அதற்கு அனுமதி வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கையூட்டல் ஊழல் விசாரணை ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.