மதன மோதகம் தயாரிப்பு தொழிற்சாலை முற்றுகை ; மூவர் கைது
அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவில் கஞ்சா கலக்கப்பட்ட 'மதன மோதகம்' தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று தங்காலைப் பிராந்திய நச்சு போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் நேற்று சனிக்கிழமை (22) முற்றுகையிட்டுள்ளனர்.
இச் சோதனையின் போது இரு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக நடவடிக்கை
இதன் போது, 270 கிலோகிராம் 994 கிராம் எடையுடைய மதன மோதகம், உற்பத்திக்குத் தயாராக வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் 500 கிராம் மதன மோதகக் கலவை, விற்பனைக்காகப் பொதி செய்யப்பட்ட 30 இலட்சம் ரூபா சந்தைப் பெறுமதியுடைய 11,133 மதன மோதகப் பொதிகள் மற்றும் 430 கிராம் கஞ்சா மற்றும் தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் போன்றன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் செவனகல மற்றும் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 26, 36 மற்றும் 50 வயதுடையவர்களாவர்.
இவர்கள் தயாரித்த போதைப்பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக அம்பலாந்தோட்டை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இன்று ஞாயிற்றுக்கிழமை (23) ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.