இலங்கை அரசியல்வாதிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல்! பந்துல அதிரடி நடவடிக்கை
நாட்டில் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பொய்யான செய்திகளால், அரசியல்வாதிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதை ஏற்றுக்கொள்கிறோம் என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஊடகங்கள் கண்காணிப்பு சட்டத்தை தயாரிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பந்துல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் செய்திகளை வெளியிடுதல் தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை அழைத்து விசேட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் அமைச்சர் பந்துல சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கேட்டுக்கொண்டார்.
ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வெளிவரும் பொய்யான செய்திகளால், அரசியல்வாதிகளின் உடமைகள், உயிர்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதை ஏற்றுக் கொள்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதைக் கருத்திற்கொண்டுதான், ஊடக கண்காணிப்பு சட்டத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் பந்துல கூறினார்.
மேலும், ஊடகக் கலாசாரம் முறையாக பேணப்பட வேண்டுமாயின் ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் கண்காணிக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டுமென ஆளும் தரப்பினர், இதன் போது சபாநாயகரை வலியுறுத்தினர்.
இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் பந்துல குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.