கிரிக்கெட் விளையாட சென்றவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி ; மாயமான கைப்பேசிகள்
அக்குறணையில் இன்று நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்குபற்றியவர்களின் 8 கையடக்கத் தொலைபேசிகளை களவாடிய சந்தேக நபர்கள் மூவர் சிசிடிவி கெமராவின் ஊடாக கண்டறியப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த போட்டிக்காக மாத்தளை பிரதேசத்தில் இருந்து சென்ற அணியினர் தமது கையடக்க தொலைபேசிகளை ஒரு பையில் இட்டு, தாம் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றில் வைத்துள்ளனர்.
போட்டி முடிந்து அவர்கள் திரும்பிச் சென்று பார்த்தபோது கையடக்கத் தொலைபேசி வைக்கப்பட்டிருந்த பை அங்கு இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
திருடப்பட்ட பையில் 8 தொலைபேசிகள் இருந்ததாகவும் அவற்றின் பெறுமதி 5 இலட்சத்து 85 ஆயிரம் ரூபாய் எனவும் தெரியவந்துள்ளது.
பின்னர், அவர்கள் இவ்விடயமாக அலவத்துகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததன் அடிப்படையில், பொலிஸார் சிசிடிவி காட்சிகளை பரிசீலித்துள்ளனர்.
அதன்படி ஒரு சந்தேக நபரை அடையாளம் கண்டு விசாரித்தில், அதில் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு கையடக்க தொலைபேசிகளை 8000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபரிடம் தொடர்ந்த விசாரணைகளுக்கமைய, இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து மூவருமாக அப்பணத்திற்கு ஹெரோயின் போதைப்பொருனை கொள்வனவு செய்தமை தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.