இலங்கையில் இப்படியும் நடக்கின்றது; அவதானம் மக்களே!
தனது ஆட்டோவில் பயணித்தவரிடம் இளநீர் வாங்கி குடித்த ஆட்டோ சாரதி மயங்கியதுடன் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியையும் இழந்துள்ள சம்பவம் ஒன்று பலாங்கொட நகரில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருகையில்,
பலாங்கொட நகரில் உள்ள ஆட்டோ தரிப்பிடத்திற்கு வந்த நபர் ஒருவர் வாடகைக்கு ஆட்டோ பிடித்துள்ளார். பெல்மடுல்ல என்ற பகுதிக்கு பயணிக்கவேண்டும் என கூறிய நிலையில் ஆட்டோ சாரதியும் பயணித்துள்ளார்.
இதன்போது இடையில் ஆட்டோவை நிறுத்துமாறு கூறிய அந்த நபர் இரு இளநீர் வாங்கி அதில் ஒன்றை ஆட்டோ சாரதிக்கு கொடுத்துவிட்டு பயணித்துள்ளார். அதன்பின்னர் ஹொரகெட்டி என்ற இடத்தில் ஆட்டோ நிறுத்தப்பட்டதுடன் ஆட்டோ சாரதி மயங்கியுள்ளார்.
அதன் பின்னர் நடந்த சம்பவங்கள் அனைத்தும் முச்சக்கர வண்டியின் சாரதி வைத்தியசாலையில் மயக்கத்திலிருந்து மீண்ட பின்னரே நினைவுக்கு வந்துள்ளது. இளநீரை அருந்திய பின் தனக்கு மயக்க நிலை ஏற்பட்டதாகவும், நடந்த எதனையும் அறியாத சாரதி பிரதேச மக்கள் சிலர் தன்னை வைத்தியசாலையில் சேர்த்த சம்பவத்தை பின்னரே அறிந்துள்ளார்.
முச்சக்கர வண்டியின் சாரதி நடந்த விடயங்கள் தொடர்பிலும் தனது கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்கச்சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ள விடயத்தையும் பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.