களவானிகள் கூட்டு சேர்ந்து குட்டி சபைகளில் ஆட்சி
கையூட்டல் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றதனால் களவானிகள் கூட்டு சேர்ந்து குட்டி சபைகளில் ஆட்சி அமைக்க முற்படுகின்றனர் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சாணக்கியன் போன்றவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்
இசைப்பிரியாவின் மரணம் மற்றும் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குக் காரணமானவர்கள் மற்றும் அதற்கு துணை நின்றவர்களுடன் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கிறது எனவும் அவர் கூறினார்.
அத்தோடு, என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சாணக்கியன் ராஜபக்ஷர்களுடன் கரம் கோர்த்து இருந்த நபர். முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமாக இருந்தவர்களுடன் யாழில் இவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர்.
தமிழ் மக்களை ஏமாற்றும் சாணக்கியன் போன்றவர்களுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என அவர் தெரிவித்தார். கையூட்டல் மற்றும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால்தான் களவானிகள் கூட்டு சேர்ந்து குட்டி சபைகளில் ஆட்சி அமைக்க முற்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் எனவும், எதிர்க்கட்சி தலைவராகக் கூட இருப்பதற்கு அவருக்குத் தகுதி இல்லை எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.