அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தானது ; மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவலுக்கு மிகவும் ஆபத்தான காலமாக அமையும் என டெங்கு முகாமைத்துவ விசேட நிபுணர் குழு எச்சரித்துள்ளது.
விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவிக்கையில், தற்போதைய டெங்கு நிலைமை 2017ஆம் ஆண்டை விடவும் தீவிரமடையக்கூடும் எனக் குறிப்பிட்டார்.

நோயாளர்களின் எண்ணிக்கை
நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், மேல் மாகாண வைத்தியசாலைகளின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், சில வைத்தியசாலைகளில் ஒரே படுக்கையில் பல நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவிகே, பருவமழைக் காலங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பது வழக்கமானதெனவும், இதற்கான முன் தயாரிப்புகள் அவசியம் எனவும் தெரிவித்தார்.
மேலும், சில நாடுகளில் டெங்கு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், அவை உடனடியாக தொற்று பரவலைக் கட்டுப்படுத்தாது என்றும், ஏற்கனவே டெங்கு பாதிப்புக்குள்ளானவர்களிடமே அதன் செயற்பாடு சிறப்பாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.