நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்
வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாளை (01) சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிக மழை பெய்யும் என கூறப்படுகிறது.

பல இடங்களில் மழை பெய்யக்கூடும்
பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலையும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசும். இதன்போது ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மன்னார் முதல் புத்தளம் வழியாக கொழும்பு வரையிலும் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்கரைப் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு வழியாக காலி வரையான கடற்கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் புத்தளம் முதல் கொழும்பு வழியாக காலி வரையில் ஓரளவு கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.