15 ஆம் திகதி ஹர்த்தால் நடைபெறாது; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
வடக்கு கிழக்கில் வரும் 15 ஆம் திகதி ஹர்த்தால் நடைபெறாது என்றும், அடுத்த திங்கட்கிழமை அதாவது 18ஆம் திகதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மடு தேவாலய உற்சவம் மற்றும் நல்லூர் உற்சவ விசேட தினங்களைக் கருத்தில் எடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மடு மற்றும் நல்லூர் உற்சவம்
மடு தேவாலய உற்சவத்தை ஒட்டி மன்னார் குரு முதல்வருடனும் ஏனைய குருமாருடனும் சுமந்திரன் இன்று பிற்பகல் மன்னாரில் கலந்துரையாடினார்.
எனவே எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி ஹர்த்தாலை வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதில்லை என்றும், எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை அதை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சுமந்திரன் மேலும் குறிப்பிட்டார்.
வடக்கு, கிழக்கில் அளவுக்கு மீறிய இராணுவப் பிரசன்னத்தை ஆட்சேபித்தும் முத்தையன்கட்டுக்குளத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவ தாக்குதலால் உயிரிழந்தமையைக் கண்டித்தும் வடக்கு கிழக்கில் வரும் 15 ஆம் திகதி ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுமென இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.