குடியிருக்க வீடு இல்லை ; கிராம அலுவலர் அலுவலகத்திற்குள் குடிவந்த பெண்ணால் பரபரப்பு!
வவுனியாவில் குடியிருப்பதற்கு வீடு இல்லை எனத் தெரிவித்து பெண்னொருவர் வவுனியா தோணிக்கல் கிராம அலுவலர் அலுவலகத்தில் வந்து தங்கியுள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வவுனியா, தோணிக்கல், ஆலடிப் பகுதியில் பிறிதொரு நபரின் வீட்டில் வசித்து வந்த பெண் ஒருவரை வீட்டு திருத்த வேலை காரணமாக அந்த வீட்டு உரிமையாளர் வெளியேற்றியுள்ளார்.
இதனையடுத்து வாகனம் ஒன்றில் தனது வீட்டில் இருந்த பொட்களை ஏற்றிய அப் பெண் வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் தனது பொருட்களை இறக்கி வைத்து விட்டு அங்கு தங்கியுள்ளார்.
அது குறித்து அறிந்து கொண்ட பதில் கிராம அலுவலர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் பெண்ணிடம் தகவல்களை பெற்று அவரின் நிலை தொடர்பில பிரதேச செயலாளர் மற்றும் பொலிசார் ஆகியோருக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பிரதேச செயலகத்தின் மகளிர் உத்தியோகத்தர்கள் பெண்ணின் நிலமைகளை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன், பொலிசாரிடமும் தெரியப்படுத்தியிருந்தனர்.
அதேவேளை பெண் மன அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வந்தையடுத்து மருத்துவ ஆலோசனையும் பெறப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் மகளிர் பொலிசாரின் உதவியுடன் குறித்த பெண்ணை இரவு 10 மணியளவில் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்ற பின் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை அவருடைய பொருட்கள் கிராம அலுவலர் அலுவலகத்தில் உள்ள அறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிகிச்சையின் பின் பெண் தங்குவதற்கான ஒரு இடம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.