வீதியில் நடந்து செல்ல முடியாதளவு தினமும் கொலை சம்பவங்கள் : சஜித் ஆதங்கம்
நாட்டில் தினமும் கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. வீதியில் நடந்து செல்லவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லவோ கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சிறு குழந்தைகள் கூட கொல்லப்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கில் நெருக்கடி
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் கொலைகள் அதிகரித்துள்ள போதிலும், அரசாங்கம் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. சட்டம் ஒழுங்கில் கடுமையான நெருக்கடி உருவாகியுள்ளது.
ஒருவர் நீதிமன்றத்திற்குக் கூட செல்ல முடியாவிட்டால், அது ஒரு பாரியப் பிரச்சினையாகும். சட்டம் ஒழுங்கு தொடர்பாக முடிந்தவரை வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
கொலை, வன்முறை, ஊழல் ஆகியவை நடக்க முடியாது. இதற்கு ஒரு வலுவான தீர்வு பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். இந்த விடயத்தில் அரசாங்கத்தை ஆதரிக்கத் தயாராக இருக்கிறோம் என இதன் போது சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.