பிரபல ஆடையகத்தில் நூதன முறையில் திருட்டு; சிசிடிவி இருப்பதை மறந்த நபர்!
புத்தாண்டு காலத்தில் ஆடை விற்பனை களைகட்டியுள்ள நிலையில் மாத்தறை ஹக்மனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடையகமொன்றில் நூதனமான முறையில் ஆடைகள் திருடப்பட்டுள்ளது.
ஆடையகத்தில் ஆண்களுக்கான ஆடைகளை திருடிச்சென்ற நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான 15 ஆடைகளை தனது பயணப் பையில் மறைத்து திருடிச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

வெற்றுப் பையில் ஆடைகள்
சந்தேக நபர் தனது தோள்களில் ஒரு வெற்றுப் பயணப் பையைத் தூக்கிக்கொண்டு கடைக்குள் நுழைந்துள்ளார்.ஆடைகளைத் தெரிவு செய்வது போல பாசாங்கு செய்து ஆடைகளை மாற்றும் அறைக்குள் சென்றுள்ளார்.
அங்கு வைத்து சாரணங்களை ஆடைகளை தனது பையினுள் மறைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர், "சிறிது நேரத்தில் வந்து கொள்வனவு செய்கிறேன்" என்று கடை உரிமையாளரிடம் கூறிவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளார்.
ஆடைகள் திருடப்பட்டமை தொடர்பில் கடை உரிமையாளர் ஹக்மனை காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.