வேண்டிய வரங்கள் கிடைக்கும் தைப்பூச விரதம்; முருகபெருமானை இப்படி வழிபடுங்கள்!
முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு மற்றும் விரத நாட்களில் ஒன்று தைப்பூசம். தை மாத பெளர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில் தைப்பூச பெருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு பிப்ரவரி 01ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று தைப்பூச பெருவிழா கொண்டாடப்பட உள்ளது தைப்பூச விரதம் என்பது முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் மிகப் பெரிய விழா ஆகும்.

முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் மிகப் பெரிய விழா
உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து முருகன் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பல இடங்களிலும் விழா எடுத்தும் கொண்டாடுவது வழக்கம். கோடிக்கான பக்தர்கள் இந்த நாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம்.
முருகப் பெருமான், அன்னை பராசக்தியிடம் இருந்து வேல் வாங்கிய தினத்தையே நாம் தைப்பூச பெருவிழாவாக கொண்டாடுகிறோம். தைப்பூசம் அன்று முருகனை மனதார வழிபட்டால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

தைப்பூச விரதம் இருக்கும் முறைகள்
தைப்பூசம் அன்று நாள் முழுவதும் உணவை தவிர்த்து உபவாசமாக விரதம் இருக்கலாம். முழு உபவாசமாக இருக்க முடியாதவர்கள் உப்பு சேர்க்காத எளிய உணவை மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
அல்லது பால், பழம் மட்டும் எடுத்துக் கொண்டு தைப்பூச விரதம் இருக்கலாம். பால் குடமாகவோ அல்லது பால் காவடியாகவோ எடுத்துச் சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்யலாம்.
முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், புஷ்பம், இளநீர் உள்ளிட்ட காவடிகள் சுமந்து சென்று வழிபடலாம். அப்படி காவடி எடுப்பவர்கள் குறைந்தபட்சம் 5 நாட்களாவது விரதம் இருப்பது நல்லது.

தைப்பூசம் அன்று அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று அங்கப்பிரதட்சணம் செய்து வேண்டிக் கொள்ளலாம். இது எதுவும் முடியாதவர்கள் வீட்டில் இருந்த படியே விரதம் இருக்கலாம்.
அன்றைய தினம் தேவையற்ற பேச்சுக்களை தவிர்த்து முருக நாமங்களை மட்டுமே ஜபித்த படி, தியானம் செய்யலாம். தைப்பூச விரதம் எத்தனை நாட்கள் இருந்தாலும் விரத காலத்தில் உடல் மற்றும் மன கட்டுப்பாடு கடைபிடிப்பது அவசியம்.
மாலை அணிந்து, விரதம் இருந்து, முருகனின் திருநாமங்களை சொல்லியபடி, முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சொன்றும் தைப்பூச வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.
மது, மாமிசம், புகை போன்ற தீய பழக்கங்களை தவிர்த்து, முருகனை மனதார வேண்டி, பூஜை செய்தும் தைப்பூச விரதத்தையும், வழிபாட்டினையும் மேற்கொள்ளலாம்.
இது எதுவும் முடியாதவர்கள், கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விரதம் இருக்கலாம். வீட்டில் வேல் இருந்தால் அதற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.
அப்படி இல்லாதவர்கள், முருகன் படத்திற்கு பூப்போட்டு, எளிமையான நைவேத்தியம் படைத்து வழிபட்டு விரதத்தை துவக்கலாம்.
மாலையில் முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி, உங்களுக்கு தெரிந்த மந்திரங்களை சொல்லி, முருகனுக்கு ஏதாவது நைவேத்தியம் படைத்து, வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
இவற்றில் அவரவருக்கு முடிந்த எளிமையான முறையில் விரதம் இருந்து, முருகனை வழிபட்டு, முருகப் பெருமானின் திருவருளை முழுவதுமாக பெற முடியும்.