உலகின் மிக வயதான மனிதர் காலமானார்!
உலகின் மிக வயதான மனிதர் என்று கூறப்படும் பிரேசிலைச் சேர்ந்த ஜோஸ் பாலினோ கோம்ஸ் தனது 127ஆவது வயதில் காலமானார்.
பிரேசிலைச் சேர்ந்த ஜோஸ் பாலினோ எதிர்வரும் 4ஆம் திகதி தனது 128ஆவது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில், மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் அமைந்துள்ள பெட்ரா பொனிடாவில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
வயது முதிர்வு காரணமாக உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவர் இறந்ததாக பாலினோவின் குடும்பத்தினர் தெரிவித்தனர். ஒகஸ்ட் 4, 1895 இல் பிறந்த ஜோஸ் பாலினா, முதல் மற்றும் 2ஆம் உலகப் போர் மற்றும் மூன்று பெருந்தொற்று நோய் காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்.

வில்லியன் ஜோஸ் ரோட்ரிக்ஸ் டி சௌசா என்ற அதிகாரி, ஜோஸ் பாலினாவின் வயது துல்லியமானது என்றும், அவர் 1900க்கு முன் பிறந்தவர் என்றும் தெரிவித்தார். முன்னர் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த 116 வயதான மரியா பிரன்யாஸ் மோரேரா உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ஜோஸ் பாலினாவின் பிறப்பு பற்றியத் துல்லியமாக ஆராயும் பட்சத்தில் கின்னஸ் அமைப்பு ஆராயுமானால் மரியா பிரன்யாஸ் மோரேராவின் இடம் பாலினாவிற்கு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஜோஸ் பாலினா ஒரு எளிய மற்றும் அடக்கமான மனிதர் என்றும் இயற்கையான வாழ்க்கைமுறையினை வாழ்ந்தவர் என்றும் ஜோஸ் பாலினா தனது 7 பிள்ளைகள், 25 பேரக்குழந்தைகள், 42 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 11 எள்ளுப் பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
