இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்வு; சற்று முன் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு!
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு இன்றைய தினம் நடத்தப்படவுள்ள நிலையில் சற்று முன் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் இரகசிய வாக்கு சீட்டுக்களை பிரிதொரு நபருக்கு காண்பிக்கக் கூடாது என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் சபாநாயகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை பொல்துவ சந்தியில் இருந்து நாடாளுமன்ற பிரதான நுழைவாயில் வரையிலான வீதிகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதை தடுக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 14 பேருக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பை தடுப்பதற்கோ அல்லது பொதுக் கட்டடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப் போவதில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒன்று காணப்பட வேண்டும்.
மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட முடியும். நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்றமும் தமது கடமைகளைச் செய்ய ஆர்ப்பாட்டக்காரர்கள் இடமளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்கு முன்னர் நாடளாவிய ரீதியில் அமைதியின்மை ஏற்படுவதை தடுப்பதற்காகவே அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பதி ஜனாதிபதி ரணில் கூறியிருந்தார்.