கைதாகும் அச்சத்தில் விமல் வீரவன்ச!
இந்த அரசாங்கம் திங்கட்கிழமை தன்னை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போதே விமல் வீரவன்ச இதனை தெரிவித்துள்ளார்.
"நான் கீழே விழுந்தது போர்வீரர்கள் நினைவிடத்திற்கு முன்னால். அங்கு விழுந்ததில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. ஆனால், இந்த அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளின் காலடியில் விழுந்து கிடக்கிறது.

அரசாங்கம் புலம்பெயர் அமைப்புகளின் காலடியில் விழுந்து கிடக்கிறது
அப்படி விழுந்தால்தான் நாம் வெட்கப்பட வேண்டும். எனது அரசியல் வாழ்க்கையில் நான் ஒருபோதும் நாடகமாடியதில்லை. போர்வீரர்கள் நினைவிடம் என்பது ஒரு பொது இடம், அங்கு யார் வேண்டுமானாலும் சென்று அஞ்சலி செலுத்தலாம்.
அதைத் தடுக்க நினைப்பது சட்டத்திற்குப் புறம்பானது" என்றார். அங்கிருந்த வெள்ளை நிற சிறிய சுவரில் தனது கால் தட்டியதால் சமநிலை தவறி விழுந்ததாகவும், கைகளால் அதைத் தடுத்துக்கொண்டதால் முகத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும், தான் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவர் மறுத்தார்.
"நான் சட்டத்தை மீறியிருந்தால் அங்கேயே நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், தற்போது என்னையும் எங்கள் கட்சியின் மற்றொரு உறுப்பினரையும் திங்கட்கிழமை தலங்கம காவல் நிலையத்திற்கு வருமாறு அழைத்துள்ளனர்.
எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி, அன்று அவர்கள் எங்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். நாங்கள் அதற்குத் தயாராகவே இருக்கிறோம் எனவும் விமல் வீரவன்ச கூறினார்