சமையல் எரிவாயு விலை திடீர் குறைப்பு! அதிரடியாக உயர்ந்த பல அத்தியாவசியப் பொருட்களின் விலை விபரம் இதோ
இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகிய அத்தியாவசிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளமையானது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதனால் பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சும்,அமைச்சரவை அமைச்சர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
பால்மா, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் தற்போதும் சந்தையில் இப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றமை அவதானிக்க முடிகிறது. இந்த நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கப்படுகின்றமைக்கு நுகர்வோர் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
விலை உயர்ந்த்தப்பட்ட அத்தியாவசிய பொருட்களாவன,
எரிபொருள்:
அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ள ந்லையில் எரிபொருளின் விலை அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரை கனிய வள கூட்டுத்தாபனம் 70 பில்லியன் நட்டத்தை எதிர்க்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
எரிபொருளின் விலை இறுதியாக கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டது.92 ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினாலும், 95ஒக்டெய்ன் பெற்றோல் ஒரு லீற்றரின் ஒன்றின் விலை 23 ரூபாவினாலும்,ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவாலும்,சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவினாலும்,மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டது.
சமையல் எரிவாயு லிட்ரோ;
லிட்ரோ ரக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை நேற்று நள்ளிரவு முதல் முன்னறிவிப்பின்றிய வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 1,257 ரூபாவினாலும், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் விலை 503 ரூபாவினாலும், 2.5 கிலோ கிராம் நிறைவுடைய எரிவாயுவின் விலை 231 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 2,750 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் புதிய விலை 1,101 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் புதிய விலை 520 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லாக் ரக சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து லிட்ரோ ரக சமையல் எரிவாயுவின் விலையை 1200 ரூபாவினால் அதிகரிக்குமாறு கட்டுப்பாட்டு விலை அமுலில் இருக்கும் போது லிட்ரோ நிறுவனத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் அப்போது அதற்கு அனுமதி வழங்கப்படாதபோதும் அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டவுடன் லிட்ரோ நிறுவனத்தினர் 1200 ரூபாவுடன் மேலதிகமாக 57 ரூபாவையும் இணைத்து 1257 ரூபாவினால் விலையை அதிகரித்துள்ளது.
இதேவேளை லிட்ரோ நிறுவனம் நேற்று (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயு விலையை அதிகரித்திருந்த நிலையில் குறித்த விலையில் தற்போது திருத்தங்களை மேற்கொள்ளவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் மறுசீரமைக்கப்பட்ட புதிய விலை ரூ.2,675 (75 ரூபா குறைப்பு)
5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் மறுசீரமைக்கப்பட்ட புதிய விலை ரூ.1,071 (30 ரூபா குறைப்பு)
2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் மறுசீரமைக்கப்பட்ட புதிய விலை ரூ.506 (14 ரூபா குறைப்பு)
இந்த விலை குறைப்பானது கொழும்பு மாவட்டத்துக்கு மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.
லாப் காஸ்:
லாப் ரக சமையல் எரிவாயுவின் விற்பனை விலை நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 984 ரூபாவினாலும், 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலின்டரின் விலை 393 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோகிராம் நிறையுடைய சிலின்டரின் புதிய விலை 2840 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய சிலின்டரின் புதிய விலை 1,136 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோதுமை மா:
கோதுமை மாவின் விலையும் நேற்று காலை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய கோதுமை மா ஒரு கிலோகிராம் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செரண்டிப் கோதுமை மா உற்பத்தி ஆலை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய 1 கிலோகிராம் கோதுமை மாவின் புதிய விற்பனை விலை 97 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீமெந்து:
50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பெக்கெட்டின் விலை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து பெக்கெட்டின் புதிய விலை 1098 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பால்மா:
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலை 250 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதற்கமைய சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் பால்மாவின் புதிய விலை 1195 ரூபாவாகவும், 400 கிராம் பால்மாவின் புதிய விலை 480 ரூபாவாகவும் காணப்படுகிறது.
பேக்கரி உற்பத்தி உணவு பொருட்கள்:
கோதுமை மா, சமையல் எரிவாயு, பால்மா ஆகியவற்றின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதனால் பேக்கரி உற்பத்தியிலான உணவுகளின் விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும்.என பேக்கரி உணவு உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டது. பாண் ஒரு இறாத்தலின் விலை 5 ரூபாவினாலும், பனிஸ், டீ பனிஸ், ஆகியவற்றின் விலை 10 ரூபாவினாலும், ஒரு கிலோகிராம் கேக்கின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் இந்த திடீர் விலையேற்றத்தினால் இலங்கை மக்கள் பெரிதும் திண்டாட்டத்தில் உள்ளனர்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் இவற்றின் விலைகளும் அதிகரிப்பு; அதிர்ச்சியில் மக்கள்!