கடலில் அதிகளவிலான பிளாஸ்திக் பொருட்களை கொண்ட நாடுகளின் வரிசையில் இலங்கை!
கடலில் உள்ள மீன்களின் அளவை விட பிளாஸ்டிக்கின் அளவு அதிகரித்து வருகிறதென சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
கடலில் அதிகளவான பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 14வது இடத்தில் உள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஆறுகள் மற்றும் நீரோடைகள் மூலம் சுமார் 9 ஆயிரத்து 700 மில்லியன் மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் கடலில் சேர்வதாக இதுவரை பதிவான தரவுகளில் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம்
சுற்றாடல் அமைச்சில் "பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான தகவல் தொடர்பால் திட்டம்" நேற்று (08.11.2023) அமைச்சின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டபோதே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க, தெற்காசிய சுற்றாடல் ஒத்துழைப்புத் திட்டத்தின் (SAKEP) பணிப்பாளர் நாயகம் ரொக்கியா கார்ல்டன் ஆகியோர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.