சுட்டெரிக்கும் சூரியன்; சூடுபிடிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை!(Photos)
நாட்டில் வெப்பமான காலநிலை நிலவிவரும் நிலையில் மக்கள் குளிர்ச்சியான பானங்களையும் பழங்களையும் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக வீதியோரங்களில் அங்காங்கே வெள்ளரிப்பழ விற்பனை அதிகரித்துள்ளன.
வெப்பத்தை தணிக்க திண்டாடும் மக்கள்
குறிப்பாக சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதி, கல்முனை- அக்கரைப்பற்று, பிரதான பிரதேசங்களில் துவிச்சக்கரவண்டி மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகளில் வியாபாரிகள் வெள்ளரிப்பழத்தினை விற்பனை செய்து வருகின்றனர்.
மாவட்டத்தில் தற்போது நிலவி வருகின்ற வரட்சியான காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள உடல் உஷ்ணத்தை தவிர்ப்பதற்காக வெள்ளரிப்பழம் உட்பட ஏனைய பழ வகைகளை சாப்பிடுவதில் மக்கள் அதிக நாட்டம் கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாக பொதுமக்கள் ஆர்வத்துடன் வெள்ளரிப்பழத்தினை கொள்வனவில் ஈடுபடுவதை அவதானிக்க கூடியதாக இருந்தது.
150 ரூபாய் முதல் சுமார் 850 ரூபாய் வரை
அதிக வெப்பம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெள்ளரிப்பழத்திற்க்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. அத்துடன் 150 ரூபாய் முதல் சுமார் 850 ரூபாய் வரை வெள்ளரிப்பழம் பருமனுக்கேற்ப விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளரிப்பழமானது பெரும்பாலும் வெப்பமான காலங்களிலேயே அதிகமாக அறுவடை செய்யப்பட்டு வருகின்றது .
பெரும்பாலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், செங்கலடி, களுதாவளை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெருமளவில் வெள்ளரிப்பயிர்ச் செய்கை பண்ணப்பட்டு வருவதுடன் இவைகள் ஏனைய ஊர்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றது.
பனைஓலையில் மிக பாதுகாப்பாக வெள்ளரிப்பழத்தை கட்டி விற்பனையாளர்கள் விற்பனை செய்து வரும் நிலையில் வெள்ளரிப்பழங்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.