வெடுக்குநாறி மலைப்பகுதியில் இராணுவத்தினர்; பிரதேசவாசிகளுக்கு எழுந்துள்ள சந்தேகம்!
வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயப்பகுதியில் அதிகளவான இராணுவ பிரசன்னம் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்ததுடன், அங்குள்ள சில விக்கிரகங்களும் அண்மையில் சேதப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளனர்.
வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்குள் அப்பகுதி மக்கள் செல்ல முடியாது என தொல்பொருள் திணைக்களம் தடை விதித்து வரும் நிலையில் வழக்கு விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றது.
இந் நிலையில் ஊர் மக்கள் ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு செல்லாத நிலையில் , தொல்லியல் திணைக்களம் அங்குள்ள பல விக்கிரகங்களும் சூலங்களும் காணாமல் போயுள்ளதாகவும் பிரதேசவாசிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
எனினும் தற்போது ஆலயத்தை நோக்கி உழவு இயந்திரங்களில் பெளத்த தேரர்கள் அமரும் கதிரை உட்பட பொருட்கள் இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் எமது ஆலயத்தை பெளத்த மயமாக்குவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள பிரதேசவாசிகள், இது தொடர்பில் அரசியல் தலைவர்கள் உடன் நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.