தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவை விரைவில் ஆரம்பம் !
துறைமுகங்கள் கப்பல் சேவை மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா தலைமன்னாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை விரைவில் நடத்தும் நோக்குடன் நேற்றைய தினம் (04.08.2023) தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றிற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் உட்பட மன்னார் மாவட்ட செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டீமெல் , மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீபன், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் செயலாளர்கள் கடற்படை அதிகாரிகள் இந்திய நலன்புரியாளர் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
குறித்த விஜயத்தின் போது அமைச்சருடன் கலந்து கொண்டோர் தலைமன்னார் பியர் மற்றும் தலைமன்னார் பழைய பாலம் ஆகியவற்றை நேரடியாகச் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து தலைமன்னார் பியர் கடற்படையின் கேட்போர் கூடத்தில் அமைச்சர் அதிகாரிகளுடன் ஒரு கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.
இங்கு அவர் தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவை உடனடி அபிவிருத்தி வேலைத்திட்டமாக இடம்பெற வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அதாவது மூன்று மாதங்களுக்குள் குறுகிய திட்டத்தை நிறைவு செய்து தலைமன்னார் இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பித்து மக்கள் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பிரயாணம் மேற்கொள்வதற்கான நடவடிக்கையை உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும் என இங்கு வலியுறுத்தியுள்ளார்.