மாணவியை தாக்கிய அதிபருக்காக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள்!
பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள கொட்டகலை – பத்தனை – போகஹாவத்த பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரை, அதே பாடசாலையில் மீள பணிக்கு அமர்த்துமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தை பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டோர் முன்னெடுத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
குறித்த அதிபர் தாக்கியமையால் மாணவி ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் பெற்றோர் வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய அதிபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அத்துடன், மத்திய மாகாண ஆளுநரின் தலையீட்டை அடுத்து அவருக்கு தற்காலிக இடமாற்றமும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதனை வழங்க மறுத்த மாணவி தாக்கப்பட்டதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த விடயம் தொடர்பில் விரைவில் விசாரணை நடத்தி அதிபரை மீண்டும் பாடசாலையில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.