வீட்டு பாடம் செய்யாததால் இரண்டாம் தர மாணவனை தாக்கிய ஆசிரியர்
நாத்தாண்டிய, கொஸ்வத்தையில் உள்ள பாடசாலை ஒன்றில் இரண்டாம் தர மாணவன் வீட்டு பாடம் செய்யாத காரணத்தால் அம் மாணவனை ஆசிரியர் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அம் மாணவன் தாக்கப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக கொஸ்வத்தை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகம் தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன்
தாக்குதலுக்கு உள்ளான ஏழு வயது மாணவன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தாக்கப்பட்ட மாணவனின் முதுகில் பல காயங்கள் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மற்றும் மாணவனிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.